தேசிய செய்திகள்

கார் மரத்தில் மோதி பெண் குழந்தை சாவு ; 8 நாட்களில் முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் பரிதாபம்

ராமநகர் அருகே கார் மரத்தில் மோதி பெண் குழந்தை உயிரிழந்தாள். இன்னும் 8 நாட்களில் முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

ராமநகர்:

பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் வசித்து வருபவர் ராமசந்திரா. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ஹீதா என்ற பெண் குழந்தை இருந்தது. வருகிற 30-ந் தேதி ஹீதாவுக்கு முதல் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹீதாவை உறவினர்களான பூஜா, சமீர், வினோத், ஹர்ஷிதா ஆகியோர் ராமநகர் மாவட்டம் கப்பாலு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றனர்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் காரில் பெங்களூருவுக்கு வந்து கொண்டு இருந்தனர். காரை சமீர் ஓட்டினார். அக்கூர் அருகே பி.வி.பாளையா ஏரி அருகே வந்த போது சமீரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தை ஹீதா பரிதாபமாக இறந்தது. மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 8 நாட்கள் முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT