சிவமொக்கா;
சிவமொக்கா மாவட்டம் சாகரை சோந்தவர் வினோத் (வயது 19). இதேபோல் அதே பகுதியில் 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி சிறுமி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள்.
அப்போது வினோத், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி கூறினாள்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சாகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்தை போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் வினோத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.