பாட்னா,
என்னைக் கண்டு பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி அச்சப்பட வேண்டாம்; மகனின் திருமணத்தை அச்சமின்றி நடத்துங்கள்; என்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியிடம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் கிண்டலாகத் தெரிவித்தார்.
பிகார் மாநிலம்,அவுரங்காபாத் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தேஜ் பிரதாப்,சுஷில் மோடி மகனின் திருமணத்துக்குச் சென்று அவரது ஊழல்களை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாட்னாவில் உள்ள ஷாகா மைதானத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மகனின் திருமணம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்று சுஷில் அறிவித்தார்.
இந்த நிலையில், தேஜ் பிரதாப் கூறுகையில்,நான் குற்றவாளியோ அல்லது பயங்கரவாதியோ அல்ல. என்னைக் கண்டு அச்சம் கொள்ளாமல் மகனின் திருமணத்தை நடத்துங்கள் என்றார்.குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டங்களில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் பங்கேற்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.