தேசிய செய்திகள்

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் வயிற்று வலி காரணமாக மீண்டும் கோவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #Manoharparrikar

கோவா

கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் வயிற்று வலி காரணமாக மீண்டும் கோவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

62 வயதான பரிக்கர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல்வரின் உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் மருத்துவ நிர்வாகமும், கோவா அரசும் அதனை கடுமையாக மறுத்தது.

மேலும் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த வியாழனன்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையில் கோவா சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டு திட்டங்களை முன்மொழிந்த பரிக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது நீரிழிவு நோயால் அவதிப்பட்ட முதல்வர் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவா மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் முதல்வரின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என முதல்வரின் தற்போதைய உடல் நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறினார்.

மேலும் கோவா மருத்துவ முதன்மை அதிகாரி கூறுகையில், முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அவரது உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.