புதுடெல்லி,
பசு பாதுகாப்பு, குழந்தை கடத்தல் நபர்கள் என்ற பெயரில், நாட்டில் கும்பலாக சேர்ந்து, தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகமாகியுள்ளன. நாட்டு மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய சம்பவங்களை தடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக வாட்ஸ் அப் மூலமாக வதந்திகள் பரவி, இது போன்ற தாக்குதல்களுக்கு முதன்மையான காரணியாக விளங்குவதால், வாட்ஸ் அப் நிறுவனத்தையும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவது மத்திய மாநில அரசுகளுக்கு பெருத்த தலைவலியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், கும்பலாக நடத்தப்படும் தாக்குதலை தடுக்க பரிந்துரை வழங்குவதற்காக உள்துறை செயலர் ரஜீவ் கவுபா தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும். இவற்றை ஆய்வு செய்த மந்திரிகள் குழு, பிரதமர் மோடியிடம் தனது பரிந்துரையை அளிக்கும். 15 நாட்களில் இந்த அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, கும்பலாக நடத்தப்படும் தாக்குதலை கட்டுப்படுத்த கொண்டு வர வேண்டிய புதிய சட்டம் உள்ளிட்ட அம்சங்களை வகுத்து அளிக்கும் என தெரிகிறது.
கும்பலாக அரங்கேறும் இதுபோன்ற கொடூர சம்பவங்களை கட்டப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.