தேசிய செய்திகள்

அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பா.ஜனதா நிர்வாகி மீது வழக்குப்பதிவு

அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பா.ஜனதா நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பன்டேல்கான்ட் மண்டல பா.ஜனதா விவசாய பிரிவு துணைத்தலைவராக இருப்பவர் அவதேஷ் மிஸ்ரா. இவரது மனைவி பா.ஜனதா மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில், அங்கு பஞ்சாயத்து தேர்தலையொட்டி, பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி தாசில்தார் கணேஷ் பிரசாத் என்பவருக்கு அவதேஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து, அவரை பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தாசில்தார் அங்குள்ள பின்ட்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவதேஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தன்னிடம் தவறாக நடந்ததாக தாசில்தார் கணேஷ் பிரசாத் மீது அவதேஷ் மிஸ்ராவின் மனைவி புகார் கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.