புனே,
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. எனினும், பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், மராட்டியத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உயரதிகாரிகளுடன் நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்பு, முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், உணவு விடுதிகள் மற்றும் கடைகளின் நேரம் நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 22ந்தேதி முதல் கேளிக்கை பூங்காக்களை திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. எனினும், நீர்சறுக்கு இன்றி அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மராட்டியத்தில் உத்தவ் தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மராட்டியத்தில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவு விடுதிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
அவற்றுடன், அரசால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பிற அமைப்புகளும் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.