புதுடெல்லி,
பெருத்த மழை, வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்தை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.வெளிநாடுகளும் நிதி உதவி வழங்க முன் வந்து உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்து உள்ளது. கத்தார் நாடு ரூ.35 கோடி நிதி உதவி தர முன் வந்து இருக்கிறது.
ஆனால் மத்திய அரசு இந்த நிதி உதவிகளை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில், , கேரள அரசியல்வாதிகளுக்கு விளக்கம் அளித்து கேரள மாநிலத்தைச்சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானம் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "வெளிநாடுகளில் எந்தவிதமான நிதியுதவிகளையும் பெறுவதில்லை என்ற முடிவு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் எடுக்கப்பட்டது. அப்போது இருந்து, இந்தக் கொள்கையை ஒரு மரபாக அரசு பின்பற்றி வருகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ஏராளமான பொருட்சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது, பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு முன்வந்து நிதியுதவி அறிவித்தன. ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துவிட்டார். இதை அப்போதிருந்தே அரசு கொள்கையாகப் பின்பற்றி வருகிறது " இவ்வாறு தெரிவித்தார்