தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இருந்தபோதும் சரக்கு சேவை விமானங்களுக்கும், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கியிருந்த வெளிநாட்டினரை அவரவர் தாய்நாட்டில் சேர்க்கவும் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன.

இந்நிலையில் சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.