புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியில் பாதுகாப்பு படைகள் அதிஉயர் உஷார் நிலையில் இருக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் குழுவாக பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளார்கள், அவர்கள் பள்ளத்தாக்கு மற்றும் டெல்லியில் தாக்குதலை முன்னெடுக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாதிகள் குழு ஒன்று ஊடுருவி இருப்பதாகவும், இந்த குழுவினர் காஷ்மீர் மற்றும் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்றிருக்கும் அவர்கள் பெரும்பாலும், ரமலான் மாதத்தின் 17ம் நாளான சனிக்கிழமை தாக்குதல்களை நிகழ்த்தக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பதர் போர் (முதல் இஸ்லாமிய போர்) நடைபெற்ற தினமான இந்த நாளில், அதன் நினைவாக பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டும் கூட இதே நாளில் காஷ்மீரில் தாக்குதல்கள் நிகழ்ந்து இருந்தன. எனவே உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீர் மற்றும் டெல்லியில் பாதுகாப்பு படைகள் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
விமானம், பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஊடுருவிய பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக பிரிந்து உள்ளார்கள், அவர்கள் பெருமளவு ஆயுதம் கொண்டவர்களாகவும், சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்றவர்களாகவும் நம்பப்படுகிறது, என ஜம்மு காஷ்மீர் அதிகாரி கூறியதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டு உள்ளது.