தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி வருவாய் ரூ.1.12 லட்சம் கோடி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி வருவாய் ரூ.1,12,020 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஊரடங்கு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1,16,393 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் வசூலானது

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,12,020 கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.56,247 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.8,646 கோடி வருவாய் வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரிவருவாயைக் காட்டிலும் நடப்பாண்டு அதே காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகமாக ஜிஎஸ்டி வரிவருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.