அகமதாபாத்,
குஜராத் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவை அறிவித்துள்ளது. இதில் பாரதீய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், பாரதீய பழங்குடியின கட்சி 3 தொகுதிகளிலும் வென்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வென்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பாரதீய ஜனதா 49.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 41.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டா 5 லட்சத்துக்கு 51 ஆயிரத்து 615 வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக இது 1.8 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை பாரதீய ஜனதா 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா 48.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41.7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டா 34,125 வாக்குகளை பெற்றுள்ளது. இது 0.9 சதவீதமாகும்.