புதுடெல்லி,
குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவரான ஹர்திக் படேல், தனது டுவிட்டரில் இருந்து கட்சியின் பெயரை நீக்கியுள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.
2015-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தார்.
தற்போது அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள நிலையில், கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் தலை தூக்கியுள்ளது. கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வரும் ஹர்திக் படேல் திடீரென பாஜகவை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க.வைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்த கருத்து காங்கிரசிற்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், தன் பெயருடன் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்கள் தங்கள் டுவிட்டரை மாற்றி அதன்மூலம், கட்சியில் இருந்து வெளியேறப் போவதை குறிப்பாக வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இதன்மூலம், ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விரைவில் வெளியேறுவார் என தெரிகிறது.