தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் வழக்கு: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்-க்கு பிரதமர் உத்தரவு

ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்-க்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ,

செப்டம்பர் 14ம் தேதி உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தசூழலில் நேற்று சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு அங்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பாக, சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத்-க்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் தன்னிடம் அறிவுறுத்தியதாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT