சிம்லா,
இமாசலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், 6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 900 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 117 ஆண்டுகளில் முதல் முறையாக, தலைநகர் சிம்லாவில் இந்த மாதம் அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் புதன்கிழமை மழையின் தீவிரம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் லேசான தூறல் மட்டுமே இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சம்பா நகரில் 14 மி.மீ. மழை பதிவானது. இதேபோல், டல்ஹெளசியில் 11 மி.மீ., மனாலியில் 7.6 மி.மீ., கங்க்ராவில் 6.9 மி.மீ., உனாவில் 1.2 மி.மீ., சிம்லாவில் 0.4 மி.மீ. மழை பதிவானதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய் வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.