ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியானது தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 44 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது பெரும்பான்மைக்கான தொகுதிகளை விட 3 தொகுதிகள் அதிகம்.
இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, சாதி, இனம், மதம் மற்றும் தொழில் என வேற்றுமையின்றி அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் வீண் போகாது என ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்க நான் விரும்புகிறேன். ஜார்கண்ட் மாநில வளர்ச்சிக்கு பணியாற்ற நான் தயாராக உள்ளேன். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பற்றி நாங்கள் முடிவு செய்வோம். கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். லாலு பிரசாத், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் எங்களுக்கு ஆதரவளித்த பலருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜார்க்கண்ட் மக்களின் தீர்ப்பிற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.