கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கு - ஐகோர்ட்டு உத்தரவு

உத்தரபிரதேசத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தனிமைப்படுத்தும் மையங்கள் தொடர்பான ஒரு பொதுநல மனுவை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது அவர்கள் அளித்த தீர்ப்பில், தற்போதைய சூழலில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வது ஒரு வாரம் தடுக்கப்பட்டால், கொரோனா சங்கிலி உடைக்கப்படும். அது, முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமும் அளிக்கும்.

எனவே, பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அரசு கண்டிப்பாக அமல்படுத்த நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.