தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் விசுவ இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவரான ரஞ்சித்பச்சன் (வயது 40) சுட்டுக் கொல்லப்பட்டார். ரஞ்சித்பச்சனும் அவரது சகோதரர் ஆஷிஸ் என்பவரும் அங்குள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் நடைபயிற்சி சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் ரஞ்சித் பச்சன் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே பலி ஆனார். அவரது சகோதரர் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரஞ்சித் பச்சன் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். விசுவ இந்து மகாசபையை தொடங்குவதற்கு முன்பு சமாஜ்வாடி கட்சியில் இருந்தார். இவரது மனைவி கலந்தி சர்மா பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறார்.

SCROLL FOR NEXT