பாட்னா,
பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரூபி தேவி என்ற பெண் நீரஜ் என்பவரை 2009 இல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், நீரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. முகேஷுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி வரியில் ரூபியும் முகேஷும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த நீரஜ், முகேஷ் மீது தனது மனைவியைக் கடத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் அவர்கள் குடும்பத்தினரை நேரில் அழைத்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தைப் பேசி தீர்ப்பதற்காக கிராமப் பெரியோர்கள், இரு குடும்பத்தாரையும் அழைத்தனர். ஆனால், அதற்கு நீரஜ் ஒப்புக்கொள்ளாமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், முகேஷைப் பழிவாங்க நினைத்த நீரஜ், முகேஷின் மனைவியைத் திருமணம் செய்துகொண்டார்.
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், முகேஷ் மனைவியின் பெயரும் ரூபி தேவிதானாம். முகேஷின் மனைவி ரூபி தேவியும், தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்ற தன்னுடைய கணவரைப் பழிவாங்கும் நோக்கில், நீரஜைத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.