புதுடெல்லி
பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில், 10 முறை முதல்-மந்திரி பதவி வகித்த பெருமைக்குரிய நிதிஷ்குமார், பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், தன்னுடைய வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.
அவருடைய இந்த முடிவு பற்றி மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. நானா படோலே நிருபர்களிடம் கூறும்போது, பா.ஜ.க. எப்போதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றும் தன்மை கொண்டது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மராட்டியம். ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் தேர்தலை சந்தித்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆகவில்லை.
பீகாரிலும் நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலில் (பா.ஜ.க.வை குறிப்பிட்டு) போட்டியிட்டு அவர்கள் வெற்றி பெற்றனர். தற்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கப்பட்டு விட்டார் என கூறினார்.
இதுபற்றி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஹர்சவர்தன் சிங் இன்று கூறும்போது, நிதிஷ்குமார் எப்போதும் நான்கு அவைகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். அதனால், மாநிலங்களவையில் இணைய வேண்டும் என அவரே முடிவு செய்திருக்கிறார்.
அவர் அதிக சக்தி வாய்ந்த மற்றும் பீகாரின் மதிக்கத்தக்க தலைவர் மட்டுமின்றி நாடு முழுவதும் மதிக்கப்பட கூடியவர். நிதிஷ்குமார் யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாதவர் என வரலாறு கூறும். யாரும் அவருக்கு நெருக்கடி கொடுக்கவும் முடியாது. அவர் என்ன விரும்புகிறாரோ அதனை சொந்த பலத்துடன் செய்திருக்கிறார்.
அவருக்கு 43 சீட்டுகள் மட்டுமே இருந்தபோது, அவரை ஒருவரும் ஒடுக்கவில்லை. அவருக்கு தற்போது 85 சீட்டுகள் உள்ளன. ஒருவரும் அவரை ஒடுக்க முடியாது. அவர் என்ன விரும்புகிறாரோ அதனை அவர் செய்கிறார். பீகார் மக்களும் முழு மனதுடன் அவருக்கு துணையாக நிற்கின்றனர் என கூறியுள்ளார். பீகாரின் முதல்-மந்திரியாக நிதிஷ்குமாரின் பதவி காலம் பொற்கால அத்தியாயத்தில் ஒன்றாக இருக்கும் என மந்திரி அமித்ஷா இன்று அவரை பாராட்டினார். தேசிய அரசியலுக்கு அவரை வரவேற்கிறேன் என்றும் கூறினார்.