தேசிய செய்திகள்

இந்தோ-திபெத் எல்லை போலீசார் 260 பேருக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பதக்கம்

லடாக்கில் சீன படைகளுடன் துணிச்சலாக மோதிய 260 இந்தோ-திபெத் எல்லை போலீசாருக்கு உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாத தடுப்பு, எல்லைப்புற நடவடிக்கை, போதைப்பொருள் தடுப்பு போன்ற சிறப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படும் படையினருக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு இப்பதக்கம் உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த பதக்கத்துக்கு மத்திய படைகள் மற்றும் பல்வேறு மாநில போலீசார் 397 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 260 பேர், கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு சீன படைகளுடன் துணிச்சலாக மோதிய இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் ஆவர். அவர்கள் சண்டையில் ஈடுபட்டதுடன், ராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்களை கொண்டு சேர்ப்பதிலும் திறமையாக செயல்பட்டனர்.