தேசிய செய்திகள்

இடது சாரி ஆர்வலர்களின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இடது சாரி ஆர்வலர்களின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் ஐவரின் வீட்டுக்காவலை செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சியில் வெடித்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, மகாராஷ்டிர காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனைகளில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி ஆர்வலர்கள் வெர்னோன் கான்சல்வேஸ், அருண் பெரைரா, வழக்குரைஞர் சுதா பரத்வாஜ், ஆர்வலர் கெளதம் நவ்லகா ஆகியோர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேர் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்னாயக் உள்ளிட்ட ஐவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணையில், எதிர்ப்பு தெரிவிப்பது என்பது மக்களாட்சியின் பாதுகாப்பு வால்வு போன்றது என்று தெரிவித்து, 5 இடதுசாரி ஆர்வலர்களையும் வீட்டுக்காவலில் வைக்க, கடந்த மாதம் 29-ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டுக்காவலை அடுத்தடுத்து நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில், இடது சாரி ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.