லக்னோ,
செய்தித்தாளை புரட்டினாலே நாளுக்கு நாள், நம்ப முடியாத செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவை பொருத்தவரை, நம் நாட்டின் பெரிய மாநிலமாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில்தான், பல வினோதமான செயல்கள் நடந்து வருகிறது. இங்குதான், இன்ஸ்டாகிராமில் 2 ஃபாலோவர்ஸை இழந்ததற்கு கணவன் மீது புகார் கொடுப்பது, கணவனை மனைவி கொலை செய்வது என்று, இங்கு நடக்கும் அட்ராசிட்டிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்ஹத் கிராமத்தை சேர்ந்தவர் பூல்கான். இவரது மனைவி பானா. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பூல் கானுக்கும் பானாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபம் தலைக்கேறிய பூல்கான் மனைவி பானாவின் மூக்கு மற்றும் கன்னத்தில் வெறிகொண்டு கடித்தார். இதில் அவரது மூக்கில் இருந்து சதை பிய்ந்து ரத்தம் வெளியேறியது. மேலும் கன்னங்களிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
வலியால் அலறி துடித்த பானா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்து 10 தையல் போட்டனர். பின்னர் மேல் சிகிச்சைகாக அவர் ஜான்சியில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
அவரது மூக்கில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அவரது முகத்தோற்றத்தை சரிசெய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பானாவின் சகோதரர் அமரூதின் பூல்கான் மீது போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பூல் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினர்.
போலீசார் தேடுவதை அறிந்த பூல் கான் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தின் போது மனைவியின் மூக்கை கணவர் கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபத்தில் கணவர் மூக்கை கடித்து துப்பியதால் வலியால் தினமும் துடி துடித்து வருகிறார். இப்படியா செய்வது என தினமும் புலம்பி வருகிறார் பானா.