புதுச்சேரி,
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா கவர்னர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி துணைநிலை கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். இரு மாநில பொறுப்புகளை ஒரு சேர கவனித்து வரும் தமிழிசை இரு மாநிலங்களிலும் குடியரசு தின விழாவிலும்ம் தேசியக் கொடியை ஏற்றுவார் என்ற தகவலானது அரசியல் தலைவர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.
மேலும், இரண்டு மாநிலங்களிலும் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நராயணசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்துவிட்டு தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.