ஐதராபாத்,
8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோ சகருமான இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட அவருக்கு அதன் ருசி மிகவும் பிடித்து இருந்தது.
இதுகுறித்து இவான்கா கூறியதாவது:-
பழமை வாய்ந்த ஐதராபாத் நகரம் தற்போது தொழில் நுட்பத்தால் மிகவும் முன்னேற்றம் அடைந்து உள்ளது. இது அற்புதமானது. தற்போது இங்குள்ள தொழில் நுட்ப மையங்களை விட உங்களது உலக புகழ் பெற்ற பிரியாணி அவற்றை மிஞ்சி விடும் அளவுக்கு உள்ளது.
ஐதராபாத் முத்துக்களின் நகரமாகும். இந்த நகரம் உங்களின் மிகப்பெரிய புதையல் ஆகும். கனவு காண்பவர்கள், புதிய சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் தலைவர்களையும் இந்த நகரம் ஒருபோதும் கைவிடப்போவது இல்லை. உங்களது விருப்பங்களை கைவிடாமல் நாளைக்காக எப்போதும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.