புதுடெல்லி,
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்தின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு 51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பல தலைமுறைகளிடையே பிரபலமானவர், இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.