புதுடெல்லி,
டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து புதிதாக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.
அதன்பின்னர் டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி இருவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம்.
தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன். பிரதமரை சந்திக்கும் போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளேன்.
மேலும் நீட், புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளேன். தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.