புதுடெல்லி,
சீனாவில் தோன்றி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்வது எப்படி? என்று சார்க் நாடுகள் சார்பில் அவசர ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இதனை அடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய சார்க் நாடுகளின் (தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு) தலைவர்கள் ஒன்றிணைந்து இன்று ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவானது.
இதன்படி இந்த ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்கியது. அதில், காணொலி காட்சி வழியே பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இந்த கூட்டத்தில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, சுகாதார மந்திரி ஜாபர் மிர்சா கலந்து கொண்டார்.
அனைத்து நாட்டு தலைவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மிர்சா கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா வைரஸ் உள்ளது என வந்துள்ள தகவல் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும்.
அதனால் சுகாதார நெருக்கடிநிலையை கவனத்தில் கொண்டு, அந்த பகுதியில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டியது அவசியம் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.