புதுடெல்லி,
குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தலைநகர் டெல்லியில் 2020 டிசம்பர் 23-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை சம்பவத்தின் போது வீடுகள் சூரையாடப்பட்டு, தீ வைப்பு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின.
இதற்கிடையில், டெல்லி வன்முறையின் போது வடகிழக்கு டெல்லியின் கோகுல்புரி பகுதியின் பாகிரஹி விகார் என்ற பகுதியில் உள்ள மனோகரி என்ற 73 வயது மூதாட்டியின் வீட்டை கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது. மேலும், வீட்டில் கொள்ளையடித்து வீடு தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, தினேஷ் யாதவ் என்ற நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கும்பலுடன் இணைந்து தினேஷ் மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தீவைத்தது எரித்தது உறுதியானது.
இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் தினேஷின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது குற்றவாளி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
டெல்லி வன்முறை சம்பவத்தில் ஒரு நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.