புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுள்ளவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெறுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி 56 வது நாளான நேற்று வரை 2,82,18,457 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு 7 மணி வரை 20,53,537 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் 72,93,575 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 41,94,030 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 72,35,745 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 9,48,923 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 12,54,468 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 72,91,716 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.