தேசிய செய்திகள்

இந்தியாவில், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவவில்லை" - மத்திய கால்நடை துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பாலியான்

இந்தியாவில், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவவில்லைஎன்று மத்திய கால்நடை துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பாலியான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இறந்துபோகும் பறவைகளின் மாதிரிகளை உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் தேசிய அளவில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதனிடையே கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கேரள எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில், மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவவில்லை என்று மத்திய கால்நடை துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பாலியான் விளக்கம் அளித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம்,அரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி உள்ளது என்றும் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.