புதுடெல்லி
திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் 25 ஆண்டு கால மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தேர்தல் வெற்றியை பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வந்த நிலையில் சில இடங்களில் அக்கட்சிக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், திரிபுராவில் லெனினின் 2 சிலைகள் நேற்று உடைக்கப்பட்டன. இதேபோன்று நேற்று இரவு வேலூரில் திராவிட கட்சியின் நிறுவனரான பெரியார் சிலை ஒன்றும் உடைக்கப்பட்டது.
நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்களுக்கு பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் இதுபற்றி பேசினார். தொடர்ந்து சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சிலைகளை சேதப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம். சிலை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
தற்போது உள்துறை அமைச்சகம் இரண்டாவது சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை இடிப்பு விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியதை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.என கூறப்பட்டு உள்ளது