புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தியபின் மாநிலங்களவை தனியாக கூடியது. இதில் ஆம் ஆத்மியை சேர்ந்த 3 பேர் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி ஹர்தீப் புரி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி 2017-18-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சபை வருகிற 1-ந்தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மக்களவையும் காலையில் கூடியது. முதலில் ஜனாதிபதி உரையின் நகல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். தொடர்ந்து, சபையை 1-ந்தேதி காலை 11 மணிக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் 9-ந்தேதி வரை நடக்கிறது. பின்னர் சில நாட்கள் இடைவெளிக்குப்பின் மார்ச் 5-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.