தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் மனைவி-காதலி மோதல்

மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில், அவரது மனைவி-காதலி இடையே மோதல் ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம் ஆர்னி தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜூ டோட்சம். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூ டோட்சம் தனது கட்சியை சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜூ டோட்சம் நேற்று முன்தினம் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதில் அவரது ஆதரவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு அவரது மனைவியும், காதலியும் வந்திருந்தனர். இந்நிலையில் அங்கு இரு பெண்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அவர்களது சண்டையை விலக்கி விடும் முயற்சியில் எம்.எல்.ஏ. ஈடுபட்டார். அப்போது சில மர்ம நபர்கள் சூழ்ந்து கொண்டு எம்.எல்.ஏ.வை தாக்கினர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி எம்.எல்.ஏ.வை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ.வின் காதலிக்கு காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.