தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் வெளியேறுவது அதிகரிப்பு - எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தகவல்

குடியுரிமை திருத்த சட்டம் அமல் காரணமாக சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் வெளியேறுவது அதிகரித்துள்ளதாக, எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் தரப்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் சட்டவிரோதமாக குடியிருந்து வருகிறார்கள். அவர்கள், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்த பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறுவது அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து, எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. ஒய்.பி. குரானியா கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வெளியேறுவது கணிசமாக அதிகரித்து உள்ளது. ஜனவரியில் மட்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 268 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம் எனக் கூறினார்.