புதுடெல்லி
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் மோதலால் மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் நேற்று பேசிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசினார்.
அவர் பேசும்போது, கடந்த 11 ஆண்டுகளில், 53 லட்சம் டன்களுக்கும் கூடுதலான பெட்ரோலிய இருப்புகள் வளர்ச்சி கண்டுள்ளன. அவற்றை 65 லட்சம் டன்னுக்கும் கூடுதலாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதுதவிர, கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் சுத்திகரிப்பு திறனும் குறிப்பிடும்படியாக அதிகரித்து உள்ளது என்றார்.
தொடர்ந்து நாட்டு மக்களின் தேவைக்கேற்ப வினியோகம் செய்வதற்கு வேண்டிய அளவிலான கச்சா எண்ணெய் கையிருப்பு இந்தியாவிடம் போதிய அளவில் உள்ளது என இந்த அவையிலும், நாட்டுக்கும் உங்களின் வழியாக நான் உறுதியளிக்கிறேன் என பிரதமர் மோடி பேசினார்.
உலகளாவிய வர்த்தகத்திற்கான பெரிய வழிகளில் ஒன்றாக ஹார்மூஸ் ஜலசந்தி உள்ளது. அதன் வழியே கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் போன்றவை கணிச அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை, சாத்தியப்பட்ட எந்த இடத்தில் இருந்தும் கொண்டு வருவதற்கான நம்முடைய முயற்சி உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே தற்போது அவசியம். கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றை சுமந்து கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்து உள்ளன. வருங்காலத்திலும் இந்த திசையிலேயே நம்முடைய முயற்சிக்கான பணிகள் தொடரும் என்று அவர் கூறினார்.