பாராட்டு விழா
மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டம் காரட்டில் கொரோனா போராளிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை பாராட்டினார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
பற்றாக்குறை
பிரதமர் மோடியுடன் ஒருமுறை நான் மருத்துவ வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் நமது நாட்டில் எத்தனை மருத்துவ வென்டிலேட்டர்கள் உள்ளன என்று கேட்டார். அதற்கு சுமார் 2.5 லட்சம் வென்டிலேட்டர்கள் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் கொரோனா பரவியபோது அவை வெறும் 13 ஆயிரம் எண்ணிக்கையில் தான் இருப்பதாக பிரதமர் கூறினார்.
ஆக்சிஜன், படுக்கைகள், இதர மருத்துவ வசதிகள் அந்த சமயத்தில் பற்றாக்குறை நிலவின. ஆனால் இக்கட்டான அந்த சமயத்தில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பெரும் உதவி செய்தார்கள். அவர்களது மெச்சத்தகு பணியை பாராட்டுகிறேன். அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி கூட்டுறவு துறைகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ வசதிகள், தனியார் ஆஸ்பத்திரிகளும் சிறந்த பங்களிப்பை செய்தன.
600 மருத்துவ கல்லூரிகள்
சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசு- தனியார் முதலீடு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறையிலும் பிரதிபலிக்க வேண்டும். கூட்டுறவு துறையும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.நமது நாட்டுக்கு குறைந்தபட்சம் 600 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் போன்ற 50 ஆஸ்பத்திரிகள், 200 சூப்பர் பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் தேவை. எனவே சகாதாரம் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் சமூக நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும். மேலும் ஒவ்வொரு தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் ஒரு கால்நடை ஆஸ்பத்திரியாவது இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.