புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், போரால் கடுமையாக பாதித்த ஈரானுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. ஈரானின் செம்பிறை சங்கத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இந்த உதவிகளை வழங்கியது.
இந்த ஆதரவுக்காக இந்தியாவுக்கும், இந்தியாவிலுள்ள நாட்டு மக்களுக்கும் ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்து கொண்டது. இந்தியாவின் மதிப்புமிகு மக்கள் வழங்கிய மருத்துவ உதவி கொண்ட முதல் கட்ட நிவாரண பொருட்கள் ஈரானின் செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இந்திய மக்களின் இரக்கத்திற்கு உண்மையாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தூதரக செய்தி தெரிவிக்கின்றது. அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
ஈரானில் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வரும் சூழலில் இந்தியாவின் இந்த உதவி அமைந்துள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில், நிவாரண உதவிகளை வழங்கி தன்னுடைய ஆதரவை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது.