தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் - பரூக் அப்துல்லா

தலீபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டில் தற்போது தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டுடனான வர்த்தகம், தூதரகம் உள்ளிட்ட அனைத்து உறவுகளைகளும் இந்தியா துண்டித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டுவந்த வளர்ச்சித்திட்டபணிகள் தடைபட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் இறுதியில் தலீபான்களுடன் இந்தியா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருந்தபோது பல்வேறு திட்டப்பணிகளில் அந்நாட்டில் இந்தியா பல மில்லியன்களை செலவு செய்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாம் அந்த நாட்டில் அதிக முதலீடு செய்துள்ளபோது அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில் எந்த தீங்கு? என்றார்.