தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மக்களவையில் தனிநபர் மசோதா; காங்கிரஸ் எம்.பி.க்கள் முடிவு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கருதி அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ரத்து மற்றும் திருத்த மசோதா-2021 என்ற பெயரில் தனிநபர் மசோதா கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த மசோதாவை தானும், பிரனீத் கவுர், ஜஸ்பீர்சிங், சந்தோக் சவத்ரி ஆகியோரும் சேர்ந்து கொண்டு வரப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இதில் பிற கட்சிகளின் ஆதரவையும் கோரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போன்று மாநிலங்களவையிலும் ஒரு மசோதா கொண்டு வர அங்குள்ள காங்கிரஸ் எம்.பி.க்களிடம் வேண்டுகோள் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.