கொச்சி
மத்திய பிரதேசத்தின் சாந்த்வா நகரில் இயங்கி வரும் கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து 4 மாதங்களுக்கு முன்பு 1,000 எண்ணிக்கையிலான நவீன ரக கைத்துப்பாக்கிகள் கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக மத்திய பிரதேச போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு கும்பல் இந்த கைத்துப்பாக்கிகளை கடத்தியதும் தெரிய வந்தது. இதுபற்றிய தகவலை போலீசார் உடனடியாக ராணுவ உளவுத்துறைக்கு தெரிவித்தனர்.
இதற்கிடையே இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட டெல்லி போலீசார் பொம்மை வியாபாரிகள் வேடத்தில் கேரளாவுக்கு சென்று கைத்துப்பாக்கி கடத்தலில் தொடர்புடையதாக கருதப்படும் முன்வர், முகமது சாகித் ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து ராணுவ உளவுத்துறையினர் கேரளாவுக்கு விரைந்தனர். அங்கு மாநில போலீசாரின் உதவியுடன் கைத்துப்பாக்கிகள் அனுப்பி வைக்கப்பட்ட பெட்டிகளை தொடர்ந்து தேடி வந்தனர். எனினும் இதுவரை அந்த கைத்துப்பாக்கிகள் எங்கே இருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த கைத்துப்பாக்கிகள் அனைத்தும் தேச விரோத செயல்கள் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் போய் சேர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் உளவுத்துறையினர் இவற்றை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.