தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்:டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்துள்ள டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற்றதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் டெல்லி ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று கூறிவிட்டனர்.