புதுடெல்லி,
அசாம் ரைபிள் படை 185 ஆண்டு கால வரலாறு கொண்டதாகும். 55 ஆயிரம் வீரர்களை கொண்ட இந்தப் படைதான், இந்தியாவின் 1,640 கி.மீ. நீளம் உள்ள மியான்மருடனான எல்லையை கண்காணித்து வருகிறது.
தற்போது இந்தப் படை, ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்தநிலையில் அசாம் ரைபிள் படையை இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையுடன் இணைத்து தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு மத்திய உள்துறை விரும்புகிறது.
இது தொடர்பான திட்ட முன்வடிவு, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழுவின் பிரிசீலனையில் உள்ளது.
ஆனால் இந்த திட்டத்துக்கு ராணுவம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது, அசாம் ரைபிள் படையின் செயல்பாட்டு கட்டுப்பாட்டை ராணுவத்திடம் இருந்து மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது, சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் கண்காணிப்பை பாதிக்கும் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராணுவத்தின் கருத்துக்கள், பாதுகாப்பு துறை தலைமைக்கும், மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.