தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் 31 இடங்களில் வருமானவரி சோதனை; பான்மசாலா நிறுவனம் ரூ.400 கோடி மோசடி

வடமாநிலங்களில் செயல்படும் ஒரு பான்மசாலா உற்பத்தி குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கான்பூர், டெல்லி, நொய்டா, காசியாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் 31 இடங்களில் சோதனை நடந்தது.

இந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது. சோதனையில், ரூ.52 லட்சம் ரொக்கமும், ரூ.7 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. மேலும், கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கின. அந்த நிறுவனம், கணக்கில் காட்டாமல் பான்மசாலா விற்பனை செய்ததிலும், ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்ததிலும் பெருமளவு வருவாய் ஈட்டியுள்ளது. நாடு முழுவதும் 115 போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலமாக கணக்கில் காட்டாத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.400 கோடிக்கு மேல், இத்தகைய பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. போலி நிறுவனங்கள் பெயரில் தொடங்கப்பட்ட 24 போலி வங்கிக்கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. முதல் கட்ட ஆய்வின் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT