திருவனந்தபுரம்,
கேரளாவில் வரும் 9 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி கூட்டணிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ராகுல் காந்தி கூறியதாவது:-
5 ஆண்டுகள் கேரளாவில் எம்.பி.,யாக இருந்திருக்கிறேன். எனது தாயார் உடல்நலம் குன்றியிருக்கும் நிலையில் உங்களை சந்திக்க வந்துள்ளேன். அவரை கேரளாவை சேர்ந்த மலையாள செவிலியர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். அதனால் தான் நான் உங்களுடன் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.
வேறு யாரிடமும் இத்தகைய அன்பும் நேர்மையும் இல்லை. எனது நெருக்கடியான தருணங்களில் நான் வீழ்ந்து விடுவேனோ என்று உணர்ந்த நேரங்களில் கேரள மக்கள் தான் எனக்கு துணையாக நின்றார்கள் நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.