தேசிய செய்திகள்

கேபின் அழுத்தத்தால் பயணிகளுக்கு உடல் நலம் பாதிப்பு, ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

கேபின் அழுத்தத்தால் பயணிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புதுடெல்லி,

மும்பையில் இருந்து ஜெய்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பாரமாரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதாகவும் இதனால், சுமார் 30 பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில பயணிகள் கடுமையான தலைவலியை உணர்ந்ததாகவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.