லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த 10-ந் தேதி பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்காக, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு சென்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்கள் வன்முறை நடைபெற்ற லகிம்பூருக்கு நேற்று இரவு செல்ல முற்பட்டனர். இதற்காக ஜார்க்கண்டில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் உத்தரபிரதேசம் நோக்கி காரில் புறப்பட்டனர்.
இரு மாநில எல்லைப்பகுதியான வயட்கம்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தலைவர்களின் கார்கள் வந்தபோது அவற்றை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், லகிம்பூர் செல்ல அனுமதி இல்லை என காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினர்.
இதனால், காங்கிரஸ் தலைவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஜார்க்கண்ட்-உத்தரபிரதேச எல்லையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.