தேசிய செய்திகள்

பீகாரில் நிருபர் மீது கார் ஏற்றி கொலை; முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் தப்பியோட்டம்

பீகாரில் நிருபர் மீது கார் ஏற்றி கொன்ற சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் கிராம தலைவர் செயல்பட்டு உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #FormerPanchayatLeader

ஆரா,

பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் இந்தி நாளிதழ் ஒன்றில் நிருபராக பணிபுரிந்து வந்தவர் நவீன் நிஷ்சல். இவர் தனது நண்பர் விஜய் சிங் உடன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுள்ளார். அவர்கள் நாஹ்சி கிராமம் அருகே சென்றபொழுது கார் ஒன்று பைக் மீது மோதியுள்ளது.

இதில் 2 பேரும் பலியானார்கள். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் காரை தீ வைத்து கொளுத்தினர். இது ஒரு கொலை சம்பவம் என்றும் இதற்கு பின்னணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அகமது அலி என்ற ஹர்சு மற்றும் அவரது மகனான தப்ளூ ஆகியோர் உள்ளனர் என நிருபரின் சகோதரர் ராஜேஷ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

அந்த கார் ஹர்சுவுக்கு சொந்தமுடையது. அவர் நிருபருக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தப்பியோடிய தந்தை மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். ஹர்சுவின் வீட்டையும் கிராமத்தினர் அடித்து நொறுக்கினர்.

அந்த கிராமத்தில் பதற்றம் நிறைந்த சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.