மீன்பிடி படகில் திடீர் தீ
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விநாயகா என்ற ஒரு படகில் மீன்பிடிக்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 மீனவர்கள் அரபிக்கடலுக்கு சென்றனர். அவர்கள் கார்வார் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று படகின் என்ஜின் பகுதியில் புகைவெளியேறியதுடன், தீப்பிடித்தது. அந்த தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், செல்போனில் நவீன தொழில்நுட்ப வசதி மூலம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அவர்கள் கடலில் குதித்து நீந்தியபடி இருந்தனர்.
7 மீனவர்கள் மீட்பு
இதற்கிடையே கடலோர காவல் படையினர் மீட்பு கப்பல் மற்றும் படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நடுக்கடலில் தீப்பிடித்த படகுடன் தவித்த 7 மீனவர்களையும் மீட்டனர். தொடர்ந்து படகில் பிடித்த தீயை அணைத்தனர்.
அதையடுத்து அவர்கள் அனைவரும் மற்றொரு படகில் கார்வார் துறைமுகத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இந்த தீவிபத்தில் படகு முழுவதும் எரிந்து நாசமானது.
மேற்கண்ட தகவலை இந்திய கடலோர காவல்படை டி.ஐ.ஜி. வெங்கடேஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.