பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்குரிய முன்னேற்பாடுகளை அவர் செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு அவர் தற்போது கர்நாடகத்தை கடுமையாக தாக்கியுள்ள வைரஸ் பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சி செய்தால், அது சாத்தியமாகவில்லை. தடுப்பூசி வினியோகம் செய்வதில் இந்த அரசுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. தடுப்பூசி போதிய இருப்பு இல்லாதபோது, எப்படி அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்க முடியும்.
அண்டை மாநிலங்களில் மக்களுக்கு அங்குள்ள அரசுகள் நிவாரணம் கொடுக்கின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், நிவாரண உதவிகளை பொதுமக்கள் கேட்கிறார்கள். வேலை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.